SIVAKASI WEATHER
பர்மா காலனிக்கு அரசு பஸ்

08-01-2022
சிவகாசி பர்மா காலனிக்கு அரசு பஸ் இயக்கம்

சிவகாசி மேற்கு பகுதியில் பர்மா காலனி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் கூலி தொழிலாளர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தங்கள் பகுதிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் தான் வெற்றி பெற்றால் பர்மா காலனிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அசோகன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பர்மா காலனிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையில் சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் அரசு பஸ் விளாம்பட்டி, ஊராம்பட்டி வழியாக திருவேங்கடம் சென்று பின்னர் அங்கிருந்து பர்மா காலனிக்கு காலை 8.30 மணிக்கு செல்கிறது. இதே போல் மாலை 4.25 மணிக்கு சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் அரசு பஸ் 4.50 மணிக்கு பர்மா காலனி சென்று பின்னர் அங்கிருந்து துரைச்சாமிபுரம் செல்கிறது. 50 வருட கோரிக்கையை நிறைவேற்றி தந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனுக்கு பர்மா காலனி மக்கள் தொடக்க விழாவின் போது நன்றி தெரிவித்தனர்.

- Daily Thanthi


News & Events
top