SIVAKASI WEATHER
ரூ2.5 லட்சத்துக்கு புல்லட் பைக்கை வாங்கி பரிசளித்த நண்பர்கள்! திருமண விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

18-06-2023
ரூ2.5 லட்சத்துக்கு புல்லட் பைக்கை வாங்கி பரிசளித்த நண்பர்கள்! திருமண விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

நண்பரின் திருமணத்திற்காக சக நண்பர்கள் ஒன்று சேர்ந்து ரூ 2.5 லட்சம் மதிப்பிலான புல்லட் பைக்கை வாங்கி திருமண மண்டபத்திற்கு நேரில் சென்று பரிசாக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேர்ந்தவர் குகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. வழக்கம்போல வெகு விமர்சியாக இவர்களது திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்தது. குகன் தனது திருமணத்திற்காக தனது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் பத்திரிக்கையை வைத்து அழைத்திருந்தார்.

இந்நிலையில் குகனின் நண்பர்கள் குகனை திருமண நிகழ்வின் போது ஆச்சரியப்படுத்த முடிவு செய்தனர். குகனுக்கு வெகு நாட்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக்கை சொந்தமாக வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. இதை தெரிந்து கொண்ட அவரது நண்பர்கள் இந்த பைக்கை அவருக்கு திருமண பரிசாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் குகனுக்கு தெரியாமலேயே ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை குகனின் பெயரிலேயே வாங்கி அந்த பைக்கை யாருக்கும் தெரியாமல் மெதுவாக திருமண மண்டபத்திற்கு எடுத்து வந்து ஒரு துணியால் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் திருமண மண்டபத்திற்குள் இருந்த மணமக்களை அழைத்து வந்து அந்த பைக் மூடப்பட்டிருந்த துணியை எடுத்துப் பார்க்க சொன்னார்கள்.

முதலில் இதை பைக் என புரிந்து கொண்டு திருமண தம்பதியினர் துணியை விலக்கிப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தனர். இதில் குகனுக்கு மிக விருப்பமான புல்லட் பைக் இருந்து. இதை கண்டு மணமக்கள் இருவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்திருந்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 2.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு அதிக விலை கொண்ட பைக்கை வாங்கி மாப்பிள்ளையின் நண்பர்கள் திருமண பரிசாக மாப்பிள்ளைக்கு வழங்கியதை பார்த்து திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை பொறுத்தவரை இந்தியாவில் மிக நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருக்கும் ஒரு பைக்காகும். இந்த பைக்கை தன் வாழ்நாளில் நிச்சயம் வாங்க வேண்டும் என இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் கனவாக வைத்துள்ளனர். தற்போது அந்த கனவுகளை நினைவாக்கும் முயற்சியாக பலர் இந்த பைக்கை வாங்கி வருகின்றனர் .‌ இந்த பைக்கில் 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 13.36 பிஎஸ் பவரையும் 28என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வீல் ஃபோர்க் வீல்களால் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மனிதனுக்கு வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. திருமண விழாவில் ஒருவருக்கு கிடைக்கும் பரிசு அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பரிசாக இருக்கும். இந்த தருணத்தில் குகனின் நண்பர்கள் அவருக்கு பிடித்த பைக்கை வாங்கி பரிசளித்திருப்பது நிச்சயம் பாராட்டிற்குரியது. குகன் இந்த பைக்கில் அவரது மனைவியுடன் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் பயணத்தை மேற்கொள்ள நமது வாழ்த்துகள்!


News & Events
top